தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் முழு ஊரடங்கு- மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களித்த அரசு!
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மளிகளை கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கவும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு, ‘கொரோனா பெருந்தொற்று மிக வேகமாகப் பரவி வரும் இக்காலகட்டத்தில், மே 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையுள்ள காலத்திற்கு சில கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தி ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வாறான கட்டுப்பாடுகளுள் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்தக் காலக்கட்டத்தில் மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிடுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.