தமிழ்நாடு
மோடியை உதயநிதி தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்டாரா? ஆர்.பி.உதயகுமார் அதிரடி!
அரசு முறை பயணமாக டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வு விலக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். இந்நிலையில் பிரதமரை உதயநிதி தனியாக சந்தித்தது குறித்து அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த அமைச்சர்களை புறக்கணித்துவிட்டு நேற்று அமைச்சரானவர் இன்றைக்கு பிரதமரை சந்திக்கிறார். முதல்வர் ஊரில் இருக்கும் போது அமைச்சர் ஒருவர் பிரதமரை சந்திப்பது மரபு இல்லை. பிரதமரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்திருப்பது என்பது முழுக்க முழுக்க உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துகிற நடவடிக்கையாகும். இதனால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை.
மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களை, அமைச்சர்களை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. எதற்காக? ஒருவேளை தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை வாய்க்கு வந்ததை வசை பாடியதற்காக மன்னிப்பு கேட்பதற்காக தனியாக சென்றாரோ? என்னவோ? அது பிரதமருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் மட்டுமே தெரியும்.
39 பாராளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தை நீங்கள் நீட் தேர்வுக்காக முடக்க வேண்டாமா? செங்கலை காட்டியே நீங்கள் காலத்தை கழித்து விடலாம் என்று நினைத்தால் அது உங்களுடைய செங்கோலுக்கு அழகாக இருக்காது என்றார்.