ஆரோக்கியம்
நீரிழிவு நோய் உள்ளதா..?- இந்த புது வகை ‘பழ மாவு’ உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்
உலகின் நீரிழிவு நோயின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது இந்தியா. இங்கு இனிப்பு வகை உணவுகள் மற்றும் அரிசி வகை உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் காரணத்தால், வேறெந்த பாதிப்பையும்விட, நீரிழிவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், நீரிழிவை எதிர்கொள்ள ஒரு பழத்தின் மாவு சிறந்ததாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
அதாவது பழுக்காத பலாப்பழத்தால் செய்யப்படும் மாவை, உணவாக உட்கொண்டால் நீரிழிவு பாதிப்பு குறைவாக இருப்பதாக அந்த அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. பலாப்பழம் என்பது இந்தியாவில் இருக்ககும், குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையானோருக்குப் பிடித்தப் பழமாக இருக்கும். ஆனால், இந்தப் பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுவதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பலாவை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அதே நேரத்தில் பழுக்காத பலாவிலிருந்து செய்யப்படும் மாவு, நீரிழிவுக்கு எதிராக செயல்படுகிறதாம். பலாவில் இருக்கும் குறைந்த கலோரி அளவு, நார்ச்சத்து உள்ளிட்டவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றவையாக இருக்குமாம். மேலும் காயாக இருக்கும் பலாவில் இனிப்புச் சுவை இருக்காதாம். ஒருவகை சுவையற்றத் தன்மை இருக்குமாம். இதனைக் கொண்டு செய்யபடும் மாவிலிருந்து இட்லி, ரொட்டி, தோசை என செய்து சாப்பிட முடியும்.