கிரிக்கெட்
தோனி ஒரு சூப்பர் ஹீரோ: ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!
ஐபிஎல் அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். சிஎஸ்கே (CSK) அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சூப்பர் ஹீரோ என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். ஆகையால், அவருடைய ஜெர்ஸிக்கு பிரத்யேகமான சிறப்பை சென்னை அணி சேர்க்க வேண்டும் என தான் நினைப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு ட்வீட்டும் அவர் செய்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி (MSD)
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5,000 ரன்களை குவித்த வீரர்களில் ஒருவராக இணைந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. லக்னோ அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி இந்த சாதனையை அவர் கடந்தார். தோனியின் அந்த இரு சிக்ஸர்கள் குறித்து தோனியின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதிலும் ஒருசிலர் லக்னோ அணியின் வெற்றியைத் தடுத்ததே அந்த இரண்டு சிக்ஸர்கள் தான் எனவும் சொல்கின்றனர்.
ஆனந்த் மஹிந்திரா ட்வீட்
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் மூலம் தோனி குறித்த தனது கருத்தை சொல்லி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனியின் ஜெர்ஸிக்கு சிறப்பளிக்கும் வகையில் கேப் (தோள்பட்டையில் இருந்து தொங்கும் ஸ்லீவ்லெஸ் ஆடை) ஒன்றை உருவாக்க வேண்டும். ஒரு சூப்பர் ஹீரோ கேப் இல்லாமல் இருப்பதை எப்படி நாங்கள் எதிர்பார்க்க முடியும்? கேப் டிசைன் தொடர்பான சில மீம்களை முன்மொழியலாம்” எனவும் அவர் சொல்லி இருந்தார்.
இதன்படி தோனியின் ரசிகர்கள் சிலர் ஏஐ துணை கொண்டு உருவாக்கிய தோனியின் சில படங்களை பகிர்ந்தனர். அதில் ஒரு பதிவுக்கு ‘சரியாக இருக்கும்’ என ஆனந்த் மஹிந்திரா பதில் அளித்துள்ளார்.