விமர்சனம்
தில்லுக்கு துட்டு 2 விமர்சனம் – சந்தானத்துக்கு இன்னொரு ஹிட்!
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக காமெடி படங்களின் வறட்சி நிலவி வந்தது. அதற்கு காரணம் சந்தானம் ஹீரோவானது தான்.
ஹீரோவாக மாறிய சந்தானம், தனது காமெடி காட்சிகளை குறைத்துக் கொண்டு ஆக்ஷன், காதல் என தனது ரூட்டை மாற்ற முயற்சித்தார். அவரது முயற்சிகளுக்கான சரியான பலன் கிடைக்காமல், படங்கள் பெரிய தோல்விகளை தழுவியது.
சந்தானத்திற்கு ராம்பாலா இயக்கத்தில் வெளியான தில்லுக்கு துட்டு படம் நல்ல வசூலை ஈட்டி சந்தானத்திற்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. இந்நிலையில், இன்று வெளியான தில்லுக்கு துட்டு 2 படமும் காமெடி கலாய் என சந்தானத்தின் பழைய ஃபார்முலா மீண்டும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
படத்தில் சந்தானத்துக்கு இணையாக காமெடியில் மொட்டை ராஜேந்திரனும் கலக்கி உள்ளார்.
படத்தின் கதை
சந்தானம் தனது ஏரியாவில் உள்ள அனைவரையும் மரண கலாய் கலாய்த்து வருகிறார். தனது மாமா மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து குடித்து விட்டு இவர்கள் செய்யும் ரகளையில் தியேட்டரே சிரிக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க நாயகி ஷ்ரிதா சிவதாஸை யார் காதலிக்கிறார்களோ அவர்களை பேயொன்று மரண காட்டு காட்டுகிறது. சந்தானத்திடம் அவரது ஏரியாவில் கலாய் வாங்கி நொந்த ஒருவரும், நாயகியை காதலித்து பேயிடம் அடி வாங்குகிறார்.
அடிவாங்கும் அவர், சந்தானத்தை நாயகியை காதலிக்க வைத்து, பேயிடம் அடிவாங்க வைக்க முனைகிறார்.
சந்தானமும் காதலித்து, அடிவாங்க, பின்னர், இதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில், காதலை விட்டு ஓடி விடாமல், இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க கேரளா மாந்திரிகரை அணுகுகிறார். அப்போது தான் சந்தானத்தின் காதலியை ஒரு பேயை ஆட்டி வைத்திருப்பது தெரிகிறது.
அந்த பேயை சந்தானம் எப்படி கலாய்த்து, ஓட்டுகிறார் என்பதே தில்லுக்கு துட்டு படத்தின் காமெடி கலந்த கதையாக உள்ளது.
கடந்த வாரம் ரிலீசான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் காமெடியை எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்களுக்கு, நிச்சயம் இந்த படம் காமெடி விருந்தை தரும்.
பல்ப்ஸ்
என்னதான் காமெடி படமாக இருந்தாலும், லாஜிக் வேண்டாமா என்று யோசித்தால், அது படத்திற்கு பலவீனத்தை தான் தரும். தமிழ் சினிமாவில் எண்டர்டெயின் மெண்ட் படம் என்றாலே அதை மறந்து விட வேண்டும் என ஒவ்வொரு படமும் விமர்சகர்களுக்கு ஒவ்வொரு முறையும் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கிளைமேக்ஸ் அப்படியே கான்ஜுரிங் 2 படத்தின் கிளைமேக்ஸை இயக்குநர் ராம் பாலா காப்பி பேஸ்ட் செய்து வைத்துள்ளார்.
மேலும், படத்தில் இடம்பெறும் ஒரு பாடலும் ரசிக்கும் படியாக அமையவில்லை.
மொத்தத்தில் சந்தானம் ரசிகர்களுக்கு காமெடிக்கு மட்டும் இந்த படம் கியாரண்டி.
சினி ரேட்டிங்: 2.25/5.