இந்தியா
மத்திய இணையமைச்சரை இல்லத்தில் சென்று சந்தித்த தயாநிதி மாறன்: பின்னணி என்ன?
பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கை திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பல்வேறு அமைச்சர்களை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். ஆனால் இந்த சந்திப்புகள் அனைத்தும் அந்தந்த அமைச்சர்களின் அலுவலகங்களில் நடைபெறும். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் தயாநிதி மாறன் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
இதுதான் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. பிரதமர் அலுவலக இணையமைச்சரை சந்திப்பது, பிரதமரையே மறைமுகமாக சந்திப்பதற்கு சமம் என்கிறார்கள். எனவே தயாநிதி மாறன் திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக ஏதாவது தூது கொண்டு சென்றாரா என சந்தேகிக்கப்படுகிறது. மத்திய பணியாளர் நலன், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, வடகிழக்கு மாநிலங்களுக்கான நலன் உள்ளிட்ட துறைகள் ஜிதேந்திர சிங்கிடம் இருக்கின்றன.
இந்த துறைகளில் தயாநிதி மாறனுக்கு உள்ள கோரிக்கைகளை வைக்க சென்றாரா அல்லது மு.க.ஸ்டாலினின் பிரதிநிதியாக சென்றாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில். அதே நேரத்தில் தயாநிதி மாறன் திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதி பெற்று ஜிதேந்திரசிங் கை சந்தித்தாரா அல்லது ஸ்டாலினுக்கு தெரியாமல் சந்தித்தாரா என்ற கேள்விகளும் எழுகின்றன.