சினிமா
தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!
![Raayan1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2024/07/Raayan1.webp)
நடிகர் தனுஷின் 50வது படமான ‘ராயன்’ இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. தானே இயக்கி, நடித்திருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
பட வெளியீட்டை முன்னிட்டு பல திரை பிரபலங்கள் தனுஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சூர்யா, கார்த்தி, பாரதிராஜா, அனிருத் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் செல்வராகவன், தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் பாராட்டுகளைப் பதிவிட்டுள்ளார். “ராயன் படம் பார்த்தேன். படம் குறித்து என்னிடம் வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு படம் சிறப்பாக உள்ளது. நடிகராகவும் இயக்குநராகவும் தனுஷ் ஒவ்வொரு பிரேமிலும் ஜொலிக்கின்றார். ஒரு அண்ணனாக உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகின்றேன் தனுஷ். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் சார், நீங்கள் எங்களை உங்களது இசையால் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். படத்தில் நடித்துள்ள அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, தனுஷ் அதிகாலை 6 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தார். படம் முடிந்ததும், பால்கனியில் இருந்து ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். தனுஷைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமாகக் கூச்சலிட்டனர்.
தன் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, தனுஷ் தனது இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் வைத்து வணங்கி, பின்னர் தனது நெற்றிக்கு நேராக சில வினாடிகள் கையெடுத்து கும்பிட்டார். இதனால் நெகிழ்ச்சியடைந்தார்.
மேலும், தனுஷைப் பார்க்க வந்த ஒரு ரசிகர் சுவற்றில் ஏறி பால்கனிக்கு வந்ததைத் தடுத்து கீழே இறங்கும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் ரசிகர்களுக்கு காற்றில் முத்தங்களைப் பறக்கவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வு திரையரங்கத்தினரால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.