சினிமா
தன்ஷிகா நடிக்கும் புதிய படம் “யோகிடா“ பூஜையுடன் இன்று படப்பிடிப்புத் தொடக்கம்!
அருணகிரி மற்றும் ராஜ்குமார் இரு தயாரிப்பாளர்கள் இணைந்து ஜட்பட்மா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் படம் ‘யோகிடா.’ இந்தப் படத்தில் நடிகை தன்ஷிகா நாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தில் வில்லன் நடிகர் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உட்படப் பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்குப் பூபதி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி இஷ்ராத் காதரி இசையமைக்கிறார். சண்டை இயக்குநராகக் கிருஷ்ணா பணியாற்றுகிறார். இயக்குநர் கௌதம் கிருஷ்ணா வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் கௌதம் கிருஷ்ண கூறுகையில், “இந்தப் படத்தின் திரைக்கதை கதாநாயகியை மையப்படுத்திக் காதல், ஆக்ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது.” என்கிறார் இயக்குநர் கெளதம் கிருஷ்ணா.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்தப் பூஜை நிகழ்ச்சியில் நாயகி தன்ஷிகா உட்படப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பூஜைக்குப் பின் படப்பிடிப்புத் தொடங்கியது.