தமிழ்நாடு
வடபழனி கோவிலில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
வடபழனி முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வடபழனி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறை காரணமாக நேற்று கும்பாபிஷேகத்தை நேரடியாக பார்க்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கிட்டத்தட்ட அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரு சில யூடியூப் சேனல்களிலும் வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நேரலையாக ஒளிபரப்ப பட்டதை அடுத்து ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் கும்பாபிஷேகத்தை நேரடியாக காண முடியவில்லை என்ற அதிருப்தியில் இருந்த பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே வடபழனி முருகன் கோவிலுக்கு குவிந்துள்ளனர். திங்கள் முதல் வியாழன் வரை அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதை அடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு சுமார் 2,000 பக்தர்கள் முருகன் கோவிலில் வந்தததாகவும் இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும்தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடபழனி ஆண்டவர் கோவிலில் இன்று அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வரும் நாட்களில் வடபழனி கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் தொடர்ச்சியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.