இந்தியா
ட்விட்டர் இந்தியா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு! பெரும் பரபரப்பு
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களுக்கான புதிய கொள்கையை அறிவித்தது. இந்த கொள்கையை அனைத்து சமூக வலைதளங்களும் கடைபிடிக்க வேண்டும் என கால அவகாசம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கால அவகாசத்திற்குள் சமூக வலைதளங்கள் இந்தியாவின் புதிய சமூக வலைதள கொள்கையை கடைப்பிடிக்கவில்லை என்றால் தடை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்பட அனைத்து சமூக வலைதளங்களும் இந்திய அரசின் சமூக வலைதள கொள்கையை கடைபிடிக்க சம்மதம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டுவிட்டர் மற்றும் இந்திய அரசின் கொள்கையை கடைப்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அதற்கான நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது என்பதும் அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டுவிட்டர் இந்தியா மேனேஜிங் டைரக்டர் மனிஷ் மகேஸ்வரி மீது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது ட்விட்டர் இந்தியா மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ட்விட்டர் பக்கங்களில் சிறுவர்களின் ஆபாச படங்கள் அதிகம் பகிரப்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் போக்சோ சட்டத்தில் ட்விட்டர் இந்தியா மீது வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.