இந்தியா
‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ பக்கம் நீக்கம் எதிரொலி! வருத்தம் தெரிவித்த பேஸ்புக்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தொடங்கிய ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ எனும் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 26ம் தேதி முதல், டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டம் 4வது வாரமாக நீடித்து வருகிறது. மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மாறாக, மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை ஏற்க மறுத்து, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பிரதமர் மோடி தமிழில் டுவிட்.. வேளாண் துறை அமைச்சரின் கடிதத்தை படிக்கனுமாம்!
இந் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரிலான பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. இந்த பக்கத்தின் வழியாக போராட்டக்களத்தில் நடக்கும் தகவல்களை அனைத்து தரப்பினரும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிந்தது.
Really @Facebook ! ????????
You unpublished the Facebook page of @Kisanektamorcha peaceful protest #ShameOnYou #TooMuchDemocracy #DigitalKissan pic.twitter.com/qcdoTbbn4c
— Ami Verma #Entrepreneur #SoftwareDevelopment #eCom (@theamiverma) December 20, 2020
இந்த பக்கத்தை சுமார் 7 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதே போன்று இன்ஸ்டாகிராம் பக்கமும் நீக்கப்பட்டு உள்ளது.
போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவரான, யோகேந்திர யாதவ், போராட்ட நிகழ்வுகளை தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பி வந்தார்.
வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஈடுபடுவர் என்றும், அதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பர் என்றும் கூறி இருந்தார். அதன் பிறகே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
வருத்தம் தெரிவித்த பேஸ்புக்
பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை, ஞாயிறு (டிச.20) மாலை சமூக தளங்கள் வாயிலாக பரவ, பலதரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம், தடை செய்யப்பட்ட விவசாயிகளின் கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாகவும், தடங்கலுக்கு வருந்துவதாகவும் பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.