இந்தியா
போராட்ட களத்தில் தங்குவதற்கு வீடுகட்ட தொடங்கிவிட்ட விவசாயிகள்: டெல்லியில் பரபரப்பு!
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் ஆரம்பித்த விவசாயிகளின் போராட்டம், நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மசோதாக்களை திரும்பப் பெறும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது விவசாயிகள் தாங்கள் போராடும் பகுதியிலேயே தங்குவதற்கு வீடுகளையும் கட்ட ஆரம்பித்து விட்டதால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் போராட்டம் களத்திலேயே விவசாயிகள் குறைந்த செலவில் வீடுகளை கட்டி அதில் கூரை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வீட்டுக்கு சுமார் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்ததாகவும், ஒரு வீட்டில் நான்கு முதல் ஐந்து பேர் வரை தங்கி கொள்வதாகவும் கூறப்படுகிறது.
பகலில் போராட்டம் இரவில் அந்த வீடுகளில் தங்கி கொள்ளும் வகையில் இந்த வீடு அமைக்கப்பட்டு வருகிறது. போராட்டக் களத்திலேயே தங்குவதற்கு வீடு அமைக்கப்பட்டு வருவதை பார்க்குமோது, இந்த போராட்டம் இன்னும் பல மாதம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.