தமிழ்நாடு
அரசியலில் இருந்து விலகிய ஜெ.தீபாவின் பின்னணியில் சசிகலா: லண்டன் செல்கிறார்!
சமீபத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எந்த பக்கம் செல்வது என்று புரியாமல் திகைத்து நின்ற அவரது தொண்டர்களுக்கு தீபா அடுத்த ஜெயலலிதாவாக தென்பட்டார். இதனையடுத்து அவரது வீட்டில் தொண்டர்கள் கூட்டம் அலை மோதியது. அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பு என தீபா ஊடக வெளிச்சத்தில் மிதந்தார். இதனை பயன்படுத்தி அரசியலின் ஆழம் தெரியாமல் குதித்த தீபா முதலில் தனது பெயரிலேயே எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பேரவை ஒன்றை ஆரம்பித்தார்.
தொடக்கத்தில் இந்த பேரவை ஓரளவுக்கு செயல்பட்டாலும் தீபாவின் நடவடிக்கை மற்றும் அவரை சுற்றியுள்ளவர்களின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. டிரைவர் ராஜா மற்றும் கணவர் மாதவன் ஆகியோர் இடையேயான மோதல் ஊடகங்களில் வெளியாகி தீபா பேரவையை மேலும் டேமேஜ் ஆக்கியது. தொடர்ந்து தீபா பேரவை கேலியாக பேசப்பட்டு வந்தது. இருந்த கொஞ்சநஞ்ச தொண்டர்களும் பேரவையின் மோசமான செயல்பாடுகளால் விலகிச்சென்றனர்.
கிட்டத்தட்ட அப்படியோரு பேரவை இன்னமும் இருக்கிறதா என்று கேட்கிற நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜெ.தீபா தனது அரசியலுக்கு முழுக்கு போடும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் எனக்கு அரசியலே வேண்டாம். இனி பேரவை என்ற பெயரைச் சொல்லி என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். இனி நான் என் கணவர், குழந்தைகள் என்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழப் போகிறேன். பேரவை என்ற பெயரில் என்னை டார்ச்சர் செய்யாதீர்கள். இனியும் அப்படி செய்தால் போலீஸுக்கு போய்விடுவேன் என எச்சரித்தார்.
இந்நிலையில் தீபா லண்டன் சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக சில தகவல்கள் வருகின்றன. லண்டன் செல்லும் அளவுக்கு தீபாவின் பொருளாதார பின்னணியில் சசிகலா இருப்பதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜன் இருக்கும் போதே தீபா மற்றும் தீபக்கிற்கு சில உதவிகள் செய்ததாகவும் தற்போது சசிகலாவின் சம்மதத்துடனே தீபா பேரவையை கலைத்துவிட்டு லண்டன் சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தீபா லண்டனிலேயே குடியேற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.