செய்திகள்
4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை….
வட கிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதோடு, புதிதாக உருவாகியுள்ள புயல் இன்று மாலை சென்னையை கரை கடக்கவுள்ளது. எனவே, புயல் கரையை கடக்கும் போது 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளிலும் மின்சாரம் தடை பட்டுள்ளது. மீதமிருக்கும் பகுதிகளில் இன்று மாலை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. வங்கக்கடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது. அந்த புயல் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (11.11.2021) அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.