இந்தியா
அனுமதியின்றி மருந்து விற்பனை.. அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!
உரிமம் இல்லாமல் மருந்துகளை விற்ற அமேசான், பிளிப்கார்ட் உள்பட20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விதிமுறைகளை மீறி ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஹெல்த் பிளஸ் உள்ளிட்ட 20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். டிசிஜிஐ வி ஜி சோமானி பிப்ரவரி 8 தேதியிட்ட ஷோ-காஸ் நோட்டீஸில், உரிமம் இல்லாமல் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் டிசம்பர் 12, 2018 தேதியிட்ட டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டியுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளீக்க வேண்டும் என்றும், விதிகளுக்கு முரணாக மருந்துகளை விற்பனை செய்தல், இருப்பு வைத்தல், விற்பனை செய்தல், விநியோகம் செய்தல் ஆகியவற்றுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் கேள்வி எழுப்பியுள்ளார். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை மேற்கண்ட நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு மருந்தின் விற்பனை, இருப்பு , விற்பனை, விநியோகம் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உரிமம் தேவை, உரிமத்தின் நிபந்தனைகளை உரிமம் வைத்திருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸுக்கு எந்த பதிலும் இல்லை என்றால், இந்த விஷயத்தில் நிறுவனம் எதுவும் சொல்ல முடியாது என்று கருதப்படும் என்றும், அவர்கள் மீது எந்த அறிவிப்பும் இன்றி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் கூறியுள்ளார்.