இந்தியா
டிராக்டர் பேரணியால் வெடித்த வன்முறை; போராட்டத்தில் பின்னடைவா..? – இன்று விவசாயிகள் முக்கிய முடிவு
டெல்லியில் நேற்று, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டிராக்டர் பேரணி’ நடத்தினார்கள் விவசாயிகள். இந்தப் பேரணியால் போலீஸ் தரப்புக்கும் விவசாயிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த மோதலினால் ஒரு விவசாயி மரணமடைந்தார்.
மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல குடியரசு தினமான இன்று ‘டிராக்டர் பேரணி’ நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தன.
பேரணிக்கு டெல்லி போலீஸிடம் அனுமதி கேட்டது விவசாயிகள் தரப்பு. முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த போலீஸ், பின்னர் மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் ஒரு பாதையில் பேரணி நடத்திக் கொள்ளலாம் என்று கூறி அனுமதி வழங்கியது. அதன்படி மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பு முடிந்தவுடன், நேற்று மதியம் 12 மணிக்கு மேல் விவசாயிகளின் பேரணி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில விவசாய சங்கங்கள் காலை 8 மணிக்கே போலீஸ் விதித்திருந்த தடையை மீறி பேரணி செல்ல ஆரம்பித்தனர். இதனால் இரு தரப்புக்கும் பல்வேறு இடங்களில் மோதல் வெடித்தது. இதன் உச்சக்கட்டமாக விவசாயிகள், டெல்லியின் செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் வந்திருப்பதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து விவசாய சங்கங்களின் தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனர். தங்கள் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்தும் விவசாய சங்கங்கள் இன்று முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
டெல்லியில் மீண்டும் அசம்பாவித சம்பங்கள் நடந்துவிடக் கூடாது என்னும் நோக்கில் மத்திய உள்துறை அமித்ஷாவும் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். அதன்படி, தலைநகர் டெல்லியில் மேலும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்படுவார்கள் எனத் தகவல் வந்துள்ளது.