இந்தியா
சமையல் சிலிண்டர் விலை 10% குறைய வாய்ப்பு: விரைவில் வரப் போகும் நல்ல செய்தி!
இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்வதில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக மத்திய எரிவாயுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து எரிவாயு கொள்முதல் செய்வதில் புதிய நடைமுறையை பின்பற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குழாய் மூலம் கொண்டு வரப்படும் இயற்கை எரிவாயுவின் விலையானது 10% குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல சி.என்.ஜி. எரிவாயுவின் விலையும் 6% அளவுக்கு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எரிவாயு விலை குறையும்
தற்போது முதன்மையான எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கை வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் 6.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் இயற்கை எரிவாயுவின் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சீர்திருத்தங்களினால், நுகர்வோருக்கு விலையை குறைத்து கொடுக்க வாய்ப்பு ஏற்படும். உலக நாடுகள் இயற்கை எரிவாயுவின் விலையை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கும்.
இதன் அடிப்படையில் தான் இந்தியாவிலும் இயற்கை எரிவாயுவின் விலையானது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையை மாற்ற வேண்டும் என இயற்கை எரிவாயுத் துறை முடிவு செய்துள்ளது. ஆகவே, புதிய முறைப்படி மாதந்தோறும் எரிவாயு விலை நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதால் இனி வரும் காலங்களில் கியாஸ் விலை கணிசமாக குறையும்.
மத்திய மந்திரி ஹர்தீப் பூரி டுவிட்டரில் வெளியிட்ட கருத்தில், சர்வதேச எரிவாயு விலை உயர்வின் தாக்கத்தை, இந்தியாவில் எரிவாயு விலையைக் குறைப்பதன் மூலமாக எரிவாயு நுகர்வோரின் நலனைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எடுக்கப்பட்ட முயற்சி வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.