தமிழ்நாடு
24 மணி நேரத்தில் உருவாகும் புயல்: தமிழகத்துக்கு ரெட் அலர்ட்!
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவைக்கு அதிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுபெற்று புயலாக மாறும் என தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபானி என புயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
24 மணி நேரத்தில் உருவாக உள்ள இந்த புயலானது இலங்கை கடல் வழியாக 30-ஆம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 65 கி.மீ வரை இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.