தமிழ்நாடு
புயலாக மாறுகிறது தாழ்வு மண்டலம்: கரையை கடப்பது எங்கே?
தென்கிழக்கு வங்க கடலில் நான்காவது முறையாக குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தென்கிழக்கு வங்கக்கடலில் தொடர்ச்சியாக மூன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது என்பதும் அது தாழ்வு மண்டலமாக உருவாகி கரையை கடந்தது என்பதும் புயலாக உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நான்காவது முறையாக காற்றழுத்த தாழ்வு தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி இருப்பதாகவும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவ்வாறு புயலாக மாறினால் டிசம்பர் 4ஆம் தேதி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நெருங்கும் என்றும் அந்த பகுதியில் தான் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எனவே நான்காவதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினாலும் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் ஆனால் அதே நேரத்தில் மழை ஓரளவு பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என்றும், குறிப்பாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.