இந்தியா
மிஸ்ட் கால் கொடுத்து வங்கிக்கணக்கில் மோசடி.. தொழிலதிபரின் ரூ.50 லட்சம் காலி!
இதற்கு முன்னர் வங்கிகளில் தரப்படும் ஓடிடி எண்களை ஏமாற்றி கேட்டு தான் பணத்தை மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள் குறித்து கேள்விப் பட்டிருப்போம். ஆனால் தற்போது மிஸ்டு கால் கொடுத்து தொழிலதிபர் ஒருவரின் 50 லட்ச ரூபாயை மோசடி செய்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சைபர் குற்றவாளிகள் அவ்வப்போது நவீன முறைகளில் அப்பாவி நபர்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர் என்பதும் இவர்களை பிடிப்பதே பெரும் சவாலாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு இரவு 7 மணியிலிருந்து 9 மணிவரை பலமுறை மிஸ்டு கால் அழைப்பு வந்துள்ளது. அவர் செல் போனை எடுத்து பேசாத நிலையில் திடீரென அவரது வங்கி கணக்கில் இருந்து 50 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் சைபர் குற்றவாளிகள் புதிய முறையில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அந்த தொழிலதிபர் நடப்பு வங்கி கணக்கு வைத்திருப்பதாகவும் அதில் பெரிய நிபந்தனைகள் எதுவும் இல்லாததால் எந்தவித தடையும் இல்லாமல் மோசடி நடந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு சில தொழில் நுட்ப நுணுக்கங்களை பயன்படுத்தி மோசடியாளர்கள் மிஸ்டு கால் கொடுத்து அவருடைய சிம்மை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன் மூலம் வங்கியிலிருந்து பணத்தை மோசடி செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தற்போது வங்கிகளில் பணம் வைத்திருப்பது கூட பாதுகாப்பு இல்லை என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.