சினிமா செய்திகள்
நடிகை மீரா மிதுனுக்கு எதிராக சைபர் க்ரைம் காவல்துறையில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு..!
நடிகையும் மாடலுமான மீரா மிதுன் மீது சைபர் க்ரைம் காவல்துறையில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன் சமீபத்தில் சமுக வலைதளப் பக்கத்தில் பட்டியலின சமுகத்தினரைப் பற்றி மிகவும் தரம் குறைந்த வகையில் பேசியுள்ளார். இதற்கு பல தரப்புகளில் இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மீரா மிதுன் பிரபலங்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது, சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளைப் பதிவு செய்வது என இருந்து கொண்டே இருக்கிறார்.
சமுக வலைதளங்களில் பலரும் மீரா மிதுன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருக்கு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரி வந்தனர். இந்த சூழலில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மீரா மிதுன் மீது புகார் அளித்துள்ளார்.
வன்னி அரசு கொடுத்த புகாரின் பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல் துறையினர் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.