தமிழ்நாடு
அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து: ஓபிஎஸ் விளக்கம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிரடி கருத்துக்களை கூறிய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து அவரது சொந்த கருத்து என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு நடந்ததைத் தடுத்து நிறுத்தியது யார், சுகாதாரத் துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு என்பதை விசாரிக்க வேண்டும் மேலும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவையும் விசாரிக்க வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து நேற்று டெல்லி புறப்பட்டு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்து பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு விவாதித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அவர் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.