தமிழ்நாடு
ஊரடங்கால் தடுப்பூசி பணிக்கு பாதிப்பு வரக்கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பகல் நேர ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அறிவிப்பால் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் மனோகரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்து உள்ளதாகவும், இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வருவதற்கு எந்தவித தடையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு என தனி கட்டிடம் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மூலம் தடுப்பூசி போட வருபவர்களுக்கு கொரோனா பரவி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.