கிரிக்கெட்
தோனி மீண்டும் கேப்டன் ஆனது எப்படி? சிஎஸ்கே அறிக்கை
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிஎஸ்கே அணி கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் இருந்து பறித்து தோனியுடன் மீண்டும் கொடுத்துள்ளது. இது குறித்து பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் சிஎஸ்கே அணி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரவீந்திர ஜடேஜா தனது பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கேப்டன் பதவியை இழக்க முன்வந்தார். தோனியே மீண்டும் கேப்டனாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார் என்றும், அணியின் நலன் கருதி தோனியும் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் சிஎஸ்கே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தோனி நேற்று கேப்டனாக பணியாற்றிய முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தோனி அடுத்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு நல்ல கேப்டனை உருவாக்கி செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தனது வழிகாட்டுதலின் பேரில் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவியை அளிக்க முன்வந்தார்.
ஆனால் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி என்பது பெரும் சுமையாக இருந்து வந்ததை அடுத்து அவரால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே அதிரடி முடிவெடுத்து கேப்டன்ஷிப் பதவியை மீண்டும் தோனிக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால் அதே நேரத்தில் தோனியின் கேப்டன்சியை தான் கூர்ந்து கவனித்து வருவதாகவும் எதிர்காலத்தில் தோனி இல்லாதபோது கேப்டனாக செய்ல்பட இந்த அனுபவம் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.