தமிழ்நாடு
காற்றில் பறக்கவிடப்பட்ட கொரோனா விதிமுறைகள்: பேருந்துகளில் அளவுக்கு மீறி கூட்டம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து சமீபத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு விதிகளில் ஒன்று பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, மாஸ்க் இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்த விதிமுறைகள் உள்பட பல விதிமுறைகளை பொதுமக்கள் காற்றில் பறக்க விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி பேருந்துகளில் கூட்டம் அலை மோதுவதால் கொரோனா மேலும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து சென்னை பேருந்துகளிலும் பல பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்து வருகின்றனர்
அதேபோல் பேருந்துகளில் முககவசம் இல்லாமல் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முக கவசம் அணியாதவர்களை பேருந்துகளில் ஏற்றக் கூடாது என்ற விதி இருக்கும் நிலையில் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இதனை கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
இதுபோல் அரசு விதித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மக்களும் அரசு ஊழியர்களும் காற்றில் பறக்க விட்டு கொண்டிருப்பதால் தமிழகத்தில் மேலும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.