தமிழ்நாடு
பட்டாசு காவலன் எடப்பாடி பழனிசாமி: பட்டம் சூட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று, சிறு மற்றும் குறு தொழில்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பட்டாசு தொழிலாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை வைத்து வாதாட ஏற்பாடு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றார்.
மேலும், இது தொடர்பாக விவாதிக்க 10 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்புகளையும் வரவைத்தார். ஆகையால் முதல்வருக்கு நம்மைவிட தொழிலாளர்களைப் பற்றி நன்கு தெரியும். அதனால் பட்டாசு காவலன் எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதுபற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார்.