தமிழ்நாடு
இப்படி இருந்தா தடுப்பூசி போடாதீங்க: சீரம் நிறுவனம் வேண்டுகோள்
ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசி போடவேண்டாம் என்று சீரம் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. திங்கட்கிழமை மாலை நிலவரப்படி மொத்தம் 3 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 580 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசி போட வேண்டாம் என்றும், தேவைப்பட்டால் சுகாதாரத்துறை மூலம் நோய் எதிர்ப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசியின் நன்மை தீமைகள், அதிலுள்ள மூலப்பொருட்கள் குறித்த விவரங்களை சீரம் நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்ப்பிணிகள், கர்ப்பம் தரிக்க விரும்புகிறவர்கள், தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதுகுறித்து மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
ஏற்கெனவே மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்கள், அதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏற்கெனவே கொரோனா தடுப்பூசியைப் போட்டிருந்தால் அதனையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.