இந்தியா
மறுபடியும் முதல்ல இருந்தா? கோவிட் விதிமுறைகளை அமல்படுத்திய கர்நாடகா அரசு: முழு விபரங்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் கடும் துயரத்தில் இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே.
தற்போதுதான் ஒரு சில மாதங்கள் பொதுமக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி சாலைகளில் நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் நான்காவது அலை தோன்றும் என்ற அச்சம் காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமான பயணிகள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் விதிமுறைகளை வகுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்று சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கோவிட் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் கர்நாடக மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
கர்நாடகாவில் உணவகங்கள், பப்கள், தியேட்டர் ஹால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி.
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் பொதுக்கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும்.
பள்ளிகளில் சானிடைசர்களைப் பயன்படுத்துவது, மாஸ்க் அணிவது, 2 டோஸ் தடுப்பூசி போடுவது ஆகியவை கட்டாயமாக்கப்படும்.
மூடப்பட்ட இடங்களிலும் குளிரூட்டப்பட்ட அறைகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.