இந்தியா
கொரோனா எதிரொலி.. விமான பயணங்களில் இனி உணவு வழங்கல் கட்..!
கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 2 மணி நேரத்துக்குட்பட்ட விமான பயணங்களின் போது உணவு விநியோகிப்பதைத் தடை செய்வதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
2020-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இப்போது கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அடிக்க தொடங்கியுள்ளது.
எனவே பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய அரசு, 2 மணி நேரத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்தின் போது உணவு விநியோகிப்பதைத் தடை செய்துள்ளது. விமான பயணத்தின் போதான இந்த உணவு தடையானது ஏப்ரல் 15, வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.68 லட்சம் நபர்கள் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சர்வதேச விமான பயணம் மார்ச் 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 30 நாடுகளுடன் மட்டும் போடப்பட்டுள்ள ஏர் பபுள் ஒப்பந்தத்தின் படி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச விமான பயணங்களில் போது தொடர்ந்து உணவு வழங்கப்படும்.