இந்தியா
கொரோனா தடுப்பூசி முதல் நாளில் 1,91,181 பேருக்குப் போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது.
அதில் முதல் நாளில் மட்டும் 1,91,181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. யாரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக நாம் கொரோனா தொற்றுக்கு எதிராக நாம் போராடி வரும் நிலையில், நமது குணமாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள், முதற்கட்டமாக மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பல இடங்களில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்கள் தயங்குவதாகச் செய்திகள் வருகின்றன.
அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில், அந்த நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் இந்த தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும் போது நமது நாட்டில் பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வராததே முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தயங்குவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னையில் 568 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.