இந்தியா
நாளை முதல் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி… கொரோனா பரிசோதனை அவசியம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் உடன் வரும் பக்தர்களுக்கு தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது பரவல் குறைந்து இருப்பதன் காரணமாக பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி அளிப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆனால், அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கான அனுமதி அளிக்கப்படும். ஜூலை 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் மாதாந்திர பூஜைகள் நடைபெற உள்ளன. இதற்காக நாள் ஒன்றுக்கு ஐந்து ஆயிரம் என ஏற்கெனவே ஐந்து நாட்களுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் முன் பதிவு செய்துவிட்டனராம்.
ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கண்டிப்பாக 48 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழ் மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.