இந்தியா
சிறுவர்களுக்கு எந்தவகை தடுப்பூசி: மத்திய அரசு விளக்கம்!
சிறுவர்களுக்கு எந்த வகை தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து 18 வயதிற்கு மேலானவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் உள்ள மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில மாதங்களாக கூறிவரும் நிலையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. மற்ற தடுப்பூசிகள் பெரியவர்களுக்கே இன்னும் பெருவாரியாக செலுத்தவில்லை எனவும், கோவாக்சின் தடுப்பூசி மட்டும் இப்போதைக்கு சிறுவர்களுக்கு செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட முப்பத்தி மூன்று லட்சம் சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக 10 லட்சம் கோவாக்சின் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழகத்தில் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு பெரும்பாலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு நிலையில் தற்போது அடுத்த கட்டமாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.