இந்தியா
2 முதல் 18 வயதினருக்கு கோவேக்சின் தடுப்பூசி: மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரை
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் வெகுவாக செலுத்தப்பட்டு வருகிறது என்பதும், குறிப்பாக தமிழகத்தில் மெகா தடுப்பூசி மையம் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இரண்டு முதல் 18 வயதினர்களுக்கான தடுப்பூசி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த தடுப்பூசிகள் மத்திய அரசால் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி 2 முதல் 18 வயது வரை தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இரண்டு முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விரைவில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னரே குழந்தைகளுக்கான தடுப்பூசி அமலுக்கு வர வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை முடிவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.