தமிழ்நாடு
ஜெயலலிதாவின் உயில்; வாரிசு?: நீதிமன்றம் அதிரடி!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரம் மற்றும் அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்து அறிக்கையளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 1997-98-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தனது சொத்து வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. அவரிடம் 4.67 கோடி ரூபாய் மதிப்புக்கு அசையும் மற்றும் அசையா சொத்து இருந்ததாக வருமான வரித்துறை கூறியது. ஆனால் ஜெயலலிதாவிடம் 3.83 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வருமான வரித்துறை ஜெயலலிதாவின் சொத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் ஜெயலலிதா இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். அதில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மாற்றியமைத்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது வருமான வரித்துறை மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம்.
அதன் பின்னர் வருமான வரித்துறை சார்பில் இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வு விசாரித்தது. அவர்கள் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளின் விவரம் மற்றும் அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்து தெரிவிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.