தமிழ்நாடு
ஹெல்மெட் அணியாமல் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்: நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்!
![Vijayabaskar - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/Vijayabaskar.jpg)
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் கஜா புயல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையையும் கடுமையாக தாக்கியது. இதனால் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமா்ந்தபடி பயணித்துள்ளார். இருசக்கர வாகனத்தில் செல்லும் இரண்டுபேரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயா்நீதிமன்ற மதுரை கிளையில் இதுகுறித்து மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தாா். அதில், அமைச்சா் விஜயபாஸ்கா் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 17-ஆம் தேதிக்குள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.