தமிழ்நாடு
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: சுகாதாரத்துறையின் புதிய உத்தரவுகள்!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 600 பேர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து தமிழக சுகாதாரத் துறை அதிரடியாக ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தனிநபர் இடைவெளி, முகக்கவசம், உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 100 முதல் 200 படுகைகளை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுடன் தினசரி தொலைபேசி மூலம் பேசி அவர்களது உடல் நிலையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதையடுத்து ஆயிரத்துக்கு மேல் தாண்டினால் இன்னும் அதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.