இந்தியா
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சற்றுமுன் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகரித்துள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இந்த மாநிலங்களில் 15 ஆயிரத்து 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 213 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இன்று முதல் 60 வயது முதியவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக எண்ணி மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.