இந்தியா
உலகிலேயே முதல்முறையாக 2 வயது குழந்தைக்கு தடுப்பூசி: ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தகவல்
உலகிலேயே முதல்முறையாக 2 வயது குழந்தைக்கு தடுப்பூசி அடுத்த மாதம் செலுத்த உள்ளதாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இரண்டு வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தயாராகி வருவதாகவும் இதற்கான தடுப்பூசி மருந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இரண்டு வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி அக்டோபர் மாதம் முதல் செலுத்தப்படும் என்றும் ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மூன்றாவது அலை விரைவில் இந்தியாவில் தாக்கும் என்று கூறப்படும் நிலையில் மூன்றாவது அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதால் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனையில் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் ஜைடஸ் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கோவாக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு 525 பேர்களுக்கும் ஜைடஸ் நிறுவனத்தின் தடுப்புமருந்து 12 முதல் 18 வயதுக்குட்பட்ட 1000 பேர்களுக்கும் பரிசோதனை செய்துள்ளதாகவும் இந்த பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை வெற்றி பெற்றால் உலகிலேயே இந்தியாவில் முதல் முறையாக இரண்டு வயது முதல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.