இந்தியா
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது: அரசு அதிரடி!
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டு வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனம் உருவாக்கி, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை ‘அவசரகாலத்தை’ கணக்கில் கொண்டு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன் மூலம் இந்தியாவில் பொதுப் பயன்பாட்டுக்கு வரும் முதல் கொரோனா தடுப்பூசியாக கோவிஷீல்டு உள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘இந்தியாவில் எமர்ஜென்சி நிலையில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே நம் நாட்டில்தான் நான்கு வித்தியாச கொரோனா தடுப்பூசிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. சோதனையில் இருக்கும் மற்ற தடுப்பூசிகள், சீக்கிரமே பயன்பாட்டுக்கு வரும்’ என்றுள்ளார்.
இந்த தடுப்பூசியானது கொரோனா முன்கள பணியாளர்களுக்கு முதலில் கொடுக்கப்படும். தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுத்த 28 நாட்களுக்குப் பின்னர் இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும். இதன் மூலம் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது சீராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.