தமிழ்நாடு
“மத்திய அமைச்சர்களுக்கு முதல்ல போடணும்!”- கொரோனா தடுப்பூசி சர்ச்சை; மதுரை எம்.பி கருத்து
![Su.Venkatesan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/Su.Venkatesan.jpg)
கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர அவசரமாக ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளன. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ‘கொரோனா தடுப்பூசியை முதலில் மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட்டின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் ‘கோவாக்ஸின்’ தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான செயல்திறன் ஆதாரங்களோடு சமர்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அதே நேரத்தில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அப்படியான தரவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘கொரோனா தடுப்பூசி பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும். கோவாக்ஸின் தடுப்பூசியின் மூன்றாவது நிலை சோதனையில் தெளிவில்லாத நிலையில் அதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளன.
இப்படியான சூழலில்தான் வெங்கடேசன், ‘இவ்வளவு அவசரமாக அறிவிக்கப்படும் தடுப்பூசியை மத்திய அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கலாமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.