தமிழ்நாடு
தமிழகத்தில் கொரோனா பரவல் மோசமாக உள்ளது: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் திடீர் எச்சரிக்கை
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுப் பரவல் மிக மோசமாக இருப்பதாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 4,000க்கும் குறைவாகவே ஆக்டிவ் கேஸ் உள்ளன. அது ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, 0.48 சதவீதக்கும் கீழே தான் இருக்கின்றது. அது ஒரு விதத்தில் ஆறுதல் தரக்கூடிய விஷயம் தான்.
அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு என்பது ஒரு நாளைக்கு 400க்கு குறைவாக இல்லை. இது ஒரு வகையில் எங்களுக்கு அச்சம் தரக்கூடியதாகவே இருக்கிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதியாவதும் கவலை தரும் விஷயமாக உள்ளது. ஐதராபாத்தில் உருமாறிய கொரோனா கண்டறியபட்டு உள்ளது குறித்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற விஷயங்களை மக்கள் கடைபிடிக்க வேண்டும். அப்படியில்லை என்றால், மகராஷ்டிராவில் தொற்று அதிகரித்ததைப் போல இங்கும் அதிகரிக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.