உலகம்
கொரோனா இல்லா நகரமானது வூகான்!
கொரோனா வைரஸின் பிறப்பிடம் என்று கூறப்படும் வூகான், கொரோனா இல்லா நகரமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வூகான் நகரத்தின் ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரியும் பெண்ணிடம் இருந்து டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதல் முதலாகப் பரவியது கூறப்பட்டு வந்தது.
தற்போது வூகான் சிறப்பு கொரோனா மருத்துவமனையில் கொரோனா நோயாளி என்று ஒருவர் கூட இல்லை. நேற்று கடைசி நோயாளி முழுமையாகச் சிகிச்சை பெற்று வெளியானார் என்று தெரிவித்துள்ளனர்.
வூகான் நகரம் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி முதல் 76 நாட்கள் ஊரடங்கிலிருந்து வந்தது. இந்த நகரில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 500-க்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 26 லட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பாதித்துள்ள நிலையில், இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.