இந்தியா
ராகுல் காந்தி சிறை தண்டனை வழக்கில் நடந்த வினோதங்கள், சர்ச்சை சம்பவங்கள்!
பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் இந்த வழக்கு கடந்த வந்த பாதையும் தற்போது சர்ச்சைக்கு வித்துட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த சம்பவத்துக்கு குஜராத் மாநில நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ற கேள்வி முதலில் எழும்புகிறது. ராகுல் தரப்பும் இதனை நீதிமன்றத்தில் எழுப்பியது ஆனால் நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.
சூரத் நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஏ.என். டேவ் முன் ராகுல் காந்தி 2021 ஜூன் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். ஆனால் 2022 மார்ச் மாதம் மீண்டும் ராகுல் ஆஜராக வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்ததை நீதிபதி நிராகரித்து வழக்கை வேகமாக நடத்த உத்தரவிட்டார். இந்த சூழலில் வழக்கை தொடுத்த புருனேஷ் மோடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கேட்டார்.
ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடுத்தவரே அந்த வழக்கிற்கு இடைக்கால தடை கோருகிறார். ஆனால் ராகுல் தரப்பு தடை கேட்கவில்லை. குஜராத் நீதிமன்றமும் இடைக்கால தடை கொடுக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தான் பொதுவாக தடை கோருவார். ஆனால் வினோதமாக குற்றம் சுமத்தியவரே தடை கோரியுள்ளார். இந்த சூழலில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றப்பட்டு வேறு நீதிபதி இந்த வழக்கிற்கு நியமிக்கப்படுகிறார்.
இந்நிலையில்தான் மோடி-அதானி விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடிக்கிறது. நாடாளுமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கிறார் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில். இதனையடுத்து ராகுல் காந்தி வழக்கில் தடையை நீக்க மனுதாரர் கோரிக்கை வைத்து தடை நீக்கப்படுகிறது. இந்த சூழலில் தான் மார்ச் 23-ஆம் தேதி ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் சர்ச்சையாகியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால் தான் தகுதி நீக்கம் செய்யமுடியும். அதற்கேற்றவாரு இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை என்பது அதிகபட்ச தண்டனையாகும். தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பும் வெறுப்பு பேச்சாளர்களுக்குத் தான் இந்த முழுமையான அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். ஆனால் ராகுல் காந்தி அப்படியில்லை. அவருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்காமல் அதிகபட்ச தண்டனையை வழங்கி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு வழிவகுத்துள்ளது.