இந்தியா
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 5 ஆயிரத்தை தாண்டியது!
![Corona case - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Corona-case.jpg)
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் பொது சுகாதாரத்துறையும் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.
![Covid-test-1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Covid-test-1-1024x683.jpg)
கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. பல வகைகளில் இது உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இதன் பாதிப்பில் இருந்து நம்மை காத்துக்கொள்வது மிகவும் முக்கியம். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்கள், பார்வையாளர்கள், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை கூறியிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளது. திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. கடந்த 5 மாதங்களாக இல்லாத அளவாக ஒரே நாளில் 5,335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25,587-ஆக அதிகரித்துள்ளது.