தமிழ்நாடு
ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!
![CM Stalin 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/03/CM-Stalin-1.jpg)
கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தேசிய அளவில் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் ஒருவழியாக குறைந்து வருகிறது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சில அரசியல் விளையாட்டுகளும் நடந்தன என்பது மறுப்பதற்கில்லை. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதனை அடிப்படையாக வைத்து பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் தற்போது.
![CM Stalin 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/03/CM-Stalin-2.jpg)
#image_title
நாகர்கோவிலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியை அகற்ற எங்கேயாவது கலவரத்தை ஏற்படுத்தலாமா என சிலர் சதி செய்கின்றனர். தமிழ்நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். மதக்கலவரத்தை தூண்டலாமா, சாதி கலவரத்தை ஏற்படுத்தலாமா என்று திட்டம் தீட்டுகின்றனர்.
நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்தில் உலவிக் கொண்டிருக்கும் சிலர் நம் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் நம் மீது விமர்சனங்களை வைக்கின்றனர். தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால் நம் பிழைப்பு என்னாவது என சிலர் நினைக்கின்றனர். திமுகவினர் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.