இந்தியா
காங்கிரஸ் தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி: கருத்துக்கணிப்பில் தகவல்!
இன்னும் சில தினங்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு படுதீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீட்டிலும் கட்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
தற்போது பாஜக தலைமையில் மத்தியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் மோடி தலைமையில் உள்ள இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பல கட்சிகள் கோதாவில் இறங்கியுள்ளன. குறிப்பாக மாநில கட்சிகள் பலவும் ஆளும் பாஜகவுக்கு எதிராக இந்த தேர்தல் களத்தில் உள்ளன.
அதே நேரத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவும் பாஜக செல்வாக்கை கணிசமாக சரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது மெல்ல மெல்ல இழந்த தனது செல்வாக்கை மீட்டு வருகிறது. இந்நிலையில் ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்ச் நிறுவனம் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி பாஜக, காங்கிரஸ் இரண்டு தேசிய கட்சிகளுமே இந்த முறை ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெறாது என தெரிவித்துள்ளது.
அதே நேரம் மாநில கட்சிகள் இந்தமுறை முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மாநில கட்சிகளுடன் பாஜகவுக்கு சுமூகமான உறவு இல்லாததால், காங்கிரஸ் கட்சி இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும். எனவே தேர்தலுக்கு பின்னர் மாநில கட்சிகளின் ஆதரவுடன் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.