இந்தியா
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்!
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் சி வோட்டர்ஸ் நிறுவனம் இந்த தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தி அதனை வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது.
கர்நாடகா தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக சி வோட்டர்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. பாரதிய ஜனதாவுக்கு எதிராக காற்று வீசுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்தை 57 சதவீதம் பேர் விரும்புவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன. இதில் பாஜக-காங்கிரஸ் இடையே தான் நேரடி மோதல் நிலவுகிறது. சி. வோட்டர்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 115 முதல் 127 இடங்களும் பாஜகவுக்கு 68 முதல் 80 இடங்களும் , மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு 23 முதல் 35 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு அதிருப்தி நிலவி வருவதால் காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளதாக தெரிகிறது. மேலும் ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அனுதாப அலை கை கொடுக்கும் எனவும் அது கர்நாடக தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் காங்கிரஸ் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.