தமிழ்நாடு
நாங்குநேரி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி? காங்கிரஸ் ஆதரவு!
காலியாக உள்ள நாங்குநேரி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனையடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து நாங்குநேரி சட்டசபை தொகுதி காலியாக உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 10-ஆம் தேதி திருச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் திருநாவுக்கரசரிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.
நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுத்தால் நாங்கள் எளிதாக வெற்றிபெற்று விடுவோம். இது ஒரு கோரிக்கைதான் என கூறினார். இதனால் நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிடுமா அல்லது காங்கிரஸ் போட்டியிடுமா என கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசரிடம் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்டால் ஆதரவு தருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், தேர்தலில் உதயநிதி போட்டியிட விரும்பி திமுக அவருக்கு சீட் அளித்தால் காங்கிரஸ் நிச்சயம் ஆதரிக்கும். உதயநிதி நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டாலும் அல்லது வேறு எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு ஆதரவு தருவோம். அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. நாங்குநேரி காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதி. எனவே அங்கு காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புகள் உள்ளது என்றார்.