தமிழ்நாடு
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சென்னையில் கைது: காரணம் இதுதான்!
பாஜகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த ஜோதிமணி எம்பி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் கேடி ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாகவும் சட்டப்படி இந்த பிரச்சனையை சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாஜகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பாஜக பெண் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கேடி ராகவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜகவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாகவும் பொள்ளாச்சி கொடுமை போன்ற சம்பவமாக மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முற்றுகைப் போராட்டம் நடத்த இருப்பதாகவும் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா தலைமையில் இன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஜோதிமணி எம்பி கலந்து கொண்டார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வரை இந்த முற்றுகை போராட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஜோதிமணி எம்பி, வழக்கறிஞர் சுதா உள்பட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.