உலகம்
2022ல் உ.பியின் முதல்வர் வேட்பாளர்.. ஆரம்பிக்கிறது பிரியங்கா அசால்ட் அரசியல்!
டெல்லி: பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி சார்பாக நாளை நடக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்பாக அவர் உத்தர பிரதேச தேர்தல் பணிகளை கவனிக்க இருக்கிறார் என்கிறார்கள்.
உத்தர பிரதேசம் சென்ற கும்பமேளாவில் கங்கை நதியின் நீராடிய பின் இவர் தேர்தல் பணிகளை கவனிப்பார். அடுத்த வாரமே மிகப்பெரிய தேர்தல் கூட்டத்திற்கு இவர் ஏற்பாடு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவரின் முதல் தேர்தல் மாநாட்டை பார்க்க இப்போதே உத்தர பிரதேச மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
பிரியங்கா என்றால் இந்திரா காந்தி என்றுதான் உத்தர பிரதேச மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் பிரியங்காவின் அரசியல் வருகை காங்கிரசை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் 2022ல் உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இவரை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. அதாவது இவரை உத்தர பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது. இதுகுறித்து எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்.